தல வரலாறை கேட்டாலே முக்தி தரும் மாசிலாமணீஸ்வரர்

தொண்டைநாட்டு பாடல் பெற்ற 32 தலங்களில் 22வது தலமான வடதிருமுல்லைவாயில் உள்ள மாசிலாமணீஸ்வரர் கோயில் மிகப்பழமையான சிவ ஆலயம்.  சுந்தரமூர்த்தி நாயனார், அருணகிரிநாதர், வள்ளலார் ஆகியோரால் பாடல் பெற்ற தலம். வானன், ஓனன் என இரண்டு குறும்பர்கள் திருமுல்லைவாயில் காட்டில்  அரண்மனை அமைத்துக்கொண்டு, நாட்டு மக்களை துன்புறுத்திவந்தனர். அவர்களை அடக்க, தொண்டைமான் என்ற மன்னன் தன் சேனைகளுடன் காட்டிற்கு  புறப்பட்டான். 

அப்போது மன்னன் வந்த யானையின் காலில் முல்லை கொடிகள் சுற்றிக்கொண்டன, யானையின் மேல் இருந்தவாறே தன்னுடைய வாளால் கொடிகளை  வெட்டினான், அதில் இருந்து ரத்தம் வருவதைக்கண்டு கீழே இறங்கி முல்லைக்கொடிகளை அகற்றி, தன் வாளால் வெட்டப்பட்டது சிவலிங்கம் என்பதை கண்டு  உள்ளம் பதறினான். தான் செய்த தவறுக்கு தண்டனையாக தன் உயிரை மாய்த்துக்கொள்ள நினைத்தான். அப்போது இறைவன் அங்கு தோன்றி ‘‘தான்  வெட்டப்பட்டா லும் மாசிலாமணியாக விளங்குவேன்’’ என்று அருள்புரிந்தார். 

வெட்டப்பட்ட காரணத்தால் இறைவன் திருமேனியில் சந்தனகாப்பு போடப்பட்டி ருக்கும், நந்தியை அரசனுக்கு துணையாக அனுப்பி பகைவர்களை வென்றான்.  போரில் வெற்றி பெற்ற அரசன் அங்கிருந்த வெள்ளெருக்கன் தூண்களை கொண்டு இறைவனுக்கு கோயில் கட்டினான். இந்த தூண்களை இன்றும் கருவரையில்  காணலாம். வருடத்திற்கு ஒரு முறை சித்திரை மாதத்தில் இங்கே சந்தனகாப்பு நடைபெறும். திருவாரூரில் பிறக்க முக்தி, காசி இறக்க முக்தி,  திருவண்ணாமலை நினைக்க முக்தி அதுபோல இந்த தலத்தைப் பற்றி கேட்டாலே முக்தி கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

வெள்ளிக்கிழமை பௌர்ணமி சேர்த்து வரும் நாளில் மேலூரில் உள்ள ‘திருவுடையம்மனை காலையிலும்’, திருவொற்றியூறில் உள்ள வடிவுடையம் மனை மதிய  நேரத்திலும், வடதிருமுல்லைவாயில் கொடியிடை அம்மனை மாலை நேரத்திலும் நினைத்து விரதம் இருந்தால் காசி, ராமேஸ்வரம் சென்று வந்த பலன்  கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. 

பைரவர், சூரியன், நட்சத்திரங்கள், நவக்கிரகம், வீரபத்திரர் ஆகியோருக்கு தனி கோயில்கள் கிடையாது, அனைவருமே தம் வினை நீங்க இறைவனை  வழிபட்டதால் இவர்களுக்கு தனி வழிபாடு கிடையாது. அனைவரும் இறைவனுக்குள் அடக்கம். ஆவடி செல்லும் பேருந்தில் பயணம் செய்து திருமுல்லைவாயில்  சிக்னல் பஸ் நிறுத்தத்தில் இறங்கி, 10 நிமிட நடைபயணத்தில் கோயில் உள்ளது. ஷேர் ஆட்டோ வசதியும் உள்ளது.

No comments:

Post a Comment