சிவராத்திரி விரதம் இருக்கும் முறை

சிவராத்திரி விரதம் இருக்கும் முறை:- 7.3.2016 திங்கட்கிழமை
சிவராத்திரிக்கு முதல் நாள் ஒரு பொழுது மட்டும் உணவு உண்ண வேண்டும். சிவராத்திரி அன்று காலை நீராடி, இறைவனை நினைத்து, விரதம் நன்முறையில் நிறைவேறப் பிரார்த்திக்க வேண்டும். அன்று முழுவதும் உபவாசம் இருந்து, இறைச்சிந்தனையில் இருக்க வேண்டும். மாலையில் வீட்டில் சிவலிங்கத்திற்கு அபிஷேக ஆராதனைகள் செய்து, வில்வத்தால் பூஜை செய்ய வேண்டும். இரவு நான்கு காலங்களிலும் பூஜை செய்ய வேண்டும். சிவராத்திரி இரவு 11.30 மணி முதல் 1 மணி வரையே லிங்கோற்பவ நேரம் எனப்படுகிறது. ஆகவே நான்கு காலங்களிலும் பூஜை செய்ய முடியாதவர்கள், லிங்கோற்பவ காலத்திலாவது பூஜை செய்ய வேண்டும். இயலாதவர்கள், கோவிலில் நடைபெறும் நான்கு கால வழிபாடுகளிலும் பங்கு கொள்ளலாம்.

சிவபெருமான் அபிஷேகப் பிரியர். ருத்ராபிஷேகம், என்பது சிவனாருக்கு செய்யப்படும் அபிஷேகம். மந்திரபூர்வமாகச் செய்யப்படும் இது மிகச் சிறப்பு வாய்ந்தது. ருத்ராபிஷேகத்தைப் பற்றிய விவரங்கள் அறிய இங்கு சொடுக்கவும். இதை இல்லத்தில் செய்ய இயலாவிட்டால், ஆலயங்களில் செய்யலாம். சிவராத்திரி அன்று ருத்ராபிஷேகம் செய்வது மிகச் சிறப்பு.

மறு நாள் காலை பாரணை செய்து விரத நிறைவு செய்ய வேண்டும். இல்லத்தில் பூஜை செய்திருந்தால், புனர் பூஜை செய்து, சிவனாரை உத்யாபனம் செய்ய வேண்டும்.

சிவராத்திரி விரதம் இருப்பதால் ஏற்படும் பலன்கள்:
யார் வேண்டுமானாலும் சிவராத்திரி விரதத்தை மேற்கொள்ளலாம். மற்ற விரதங்கள் அனைத்தும் கடைபிடித்தவருக்கு மட்டுமே நன்மை தரும். ஆனால் சிவராத்திரி விரதம், கடைபிடித்தவருக்கு மட்டுமின்றி அவரது தலைமுறைக்கே ஈடு இணையற்ற புண்ணியத்தைத் தரும்.

ஒருவர் தொடர்ந்து 24 வருடங்கள் சிவராத்திரி விரதம் இருந்தால் அவர் சிவசாயுஜ்ய நிலையை அடைவதுடன், அவரது 21 தலைமுறைகளும் முக்தியை அடைவார்கள் என்பது ஐதீகம்.

அர்ஜூனன் சிவராத்திரி விரதத்தைக் கடைபிடித்தே பாசுபதாஸ்திரம் பெற்றான். கண்ணப்ப நாயனார் தம் கண்களை சிவனாரின் திருமேனியில் அப்பி, தம் அசையாத பக்தியால் முக்தி பெற்ற தினமும் சிவராத்திரியே. சிவராத்திரி விரத மகிமையாலேயே, அம்பிகை இறைவனின் உடலில் சரிபாதியைப் பெற்றார். சிவபெருமான், மார்க்கண்டேயருக்காக, காலனை உதைத்து, காலகண்டேசுவரர் என்ற திருநாமம் பெற்றதும் சிவராத்திரி தினத்தன்றே.

அவனருள் பெறாது முத்தி அடைந்தனர் இல்லை அல்லால்
அவனருள் இன்றி வாழும் அமரரும் யாரு மில்லை
அவனருள் எய்தின் எய்தா அரும்பொருள் இல்லை ஆணை
அவனல திறைவன் இல்லை அவனைநீ யடைதி என்றான். (கந்த புராணம்)
சிவராத்திரி தினத்தன்று, எம்பெருமானைப் பூஜித்து, சிவனருளால்,

வெற்றி பெறுவோம்!!!!

சிவபெருமானுக்கு 16 முகங்கள் உள்ள திருக்கோவில்,

சிவபெருமானுக்கு 16
முகங்கள் உள்ள திருக்கோவில்,
பிரதோசத்தன்று தரிசனம்
செய்யப்பட வேண்டிய கோவில்!

விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் ஆத்தூர் சாலையில் சுமார் 5 கி.மீ. தொலைவில், இயற்கை எழில் கொஞ்சும் பொன்பரப்பி எனும் கிராமத்தில் அமைந்திருக்கிறது ஸ்ரீசொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில். தமிழர்களின் கட்டடக் கலைக்கும், புராதனச் சிறப்புக்கும் சான்றாக விளங்கும் இந்த சிவாலயம் சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்பு மகத ஆட்சிக்கு உட்பட்டிருந்த சிற்றரசனான வானகோவராயன் என்ற குறுநில மன்னனால் கட்டப்பட்டது.

புகழ்பெற்ற கட்டடக்கலை வல்லுநர்களை கொண்டும், நுணுக்கமான வேலைப்பாடுகளுடனும் இக்கோயில் கட்டப்பட்ட காலத்தில், இவ்வூரில் செல்வம் கொழித்து பொன்னும் பொருளும் அளவற்றுப் புழங்கியதால் இவ்வூருக்கு `பொன் பரப்பி’ என்று பெயர் சூட்டி அழைத்திருக்கிறார்கள்.

பக்திக்குச் சான்று

சிற்றரசனான வானகோவராயனை, சேர, சோழ, பாண்டியர் மூவரும் தங்களுக்குக் கப்பம் கட்ட நிர்பந்தித்து வந்தனர். ஆனால் வானகோவராயன் அதற்கு உடன்படவில்லை. பலமுறை எச்சரிக்கை விடுத்தும் செவிசாய்க்காத வானகோவராயனின் மீது ஆத்திரமடைந்த சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் தங்களின் படையோடு மகதம் நோக்கி வந்தனர். இதை அறிந்த வானகோவராயன், எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் சொர்ண புரீஸ்வரரை வணங்கிவிட்டு வீரத்துடன் போருக்குக் கிளம்பினான்.

ஈசனின் பூரண அருளைப் பெற்று
போர் முரசு கொட்டி வந்த வானகோவ ராயனைப் பார்த்த மாத்திரத்தில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் தங்களது அரச முடிகளை கழற்றி வைத்துவிட்டு போர் நடவடிக்கையை கைவிட்டுத் திரும்பிச் சென்றனர். இதனாலேயே அந்த இடம் மும்முடி என்றழைக்கப்பட்ட தோடு, சொர்ண புரீஸ்வரரின் அருளுக்கும் வானகோவராயனின் பக்திக்கும் சான்றாகவும் இருந்து வருவதாக வரலாறு கூறுகிறது.

கல்வெட்டுச் சிறப்பு

இக்கோயிலைப் பற்றிய வரலாற்றை,
ஆதி கிரந்த எழுத்துக்களிலும், தமிழ் எழுத்துக்களிலும் திருக்கோயில் சுற்றுச்
சுவர்களில் உள்ள கல்வெட்டுக்களில் காணலாம்.

காசி போன்ற புண்ணிய தலங்களுக்குச் சென்று ஆயிரம் சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து வணங்குவதன் மூலம் பெறும் பலன்களை, இக்கோயிலுக்குச் செய்யும் ஏதேனும் சிறிய அளவிலான திருப் பணியின் மூலமும், ஈசனின் தரிசனத்தின் மூலமும் பெறலாம் என்பது போன்ற தகவல்களும், சிவதரிசன வழிமுறைகளும், வழிபாட்டு பலாபலன்களும் தெளிவாக இக்கல்வெட்டுகளில் விவரிக்கப்பட்டுள்ளன.

ஷோடசலிங்கத்தின் சிறப்பு

இங்கு அருளாட்சி செய்யும் சொர்ணபுரீஸ்வரர் 16 முகங்களைக் கொண்ட ஷோடசலிங்கமாக அருள்பாலிக்கிறார்.நவபாஷாணத்துக்கு நிகரான, காந்தத் தன்மையும் கொண்ட ஒரே கல்லால் செய்யப்பட்ட இந்த லிங்கத் திருமேனி சுமார் ஐந்தரை அடி உயரத்துடன் விஷ்ணு மற்றும் பிரம்ம பீடங்களின் மீது கம்பீரமாக அமைக்கப்பட்டுள்ளது.

ஷோடசலிங்கம் பல சிவாலயங்களில் இருந்தாலும், இங்கு லிங்கம் மட்டு மின்றி, விஷ்ணு பிரம்ம பீடங்களும் 16 முகங்கள் கொண்டதாகவும் வடிவமைக் கபட்டுள்ளதால், உலகையேகட்டியாளும் மும்மூர்த்திகளும் ஒரே வடிவமைப்பில் இணைந்திருப்பது தனிச்சிறப்பாகும்.

நிறம் மாறும் அபிஷேகப் பால்

பெரும்பாலான சிவாலயங்களில்
உள்ள நந்தி வயது முதிர்ந்தது போலவும், அவரின் திருமுகம் ஏதேனும் ஒரு பக்கத்தில் சாய்ந்திருப்பது போலவும் காணப்படுவது இயல்பு. ஆனால் இக்கோயிலின் நந்தியானது இளங்கன்றாகவும், சொர்ண புரீஸ்வரருக்கு நேர்கோட்டில் இருக்கு மாறும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது பிரதான நிலைப்படியில் இருந்து சிவ தரிசனம் செய்வதற்கு வசதியான அமைப்பில் இருப்பது சிறப்பாகும். இந்த நந்தீஸ்வரருக்கு அபிஷேகம் செய்யும்போது பால் உள்ளிட்டஅபிஷேக பொருட்கள் நீல நிறமாக மாறி வழிந்தோடுவது குறிப்பிடத்தக்கது.

சிற்பங்களின் எளிமை

இக்கோயில்களில் உள்ள சிற்பங்களின் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில், தெய்வ உருவங்கள் ஒவ்வொன்றும் வெறும் ருத்ராட்ச மாலையுடன் காட்சி அளிப்பதே. ஏனெனில், காகபுஜண்ட ருக்கு சிவபெருமான் எளிமையாக தரிசனம் தந்ததை உணர்த்துவதற்காக மற்ற தெய்வங்களும், ஆடம்பரங்கள் எதுவுமின்றி மிக எளிமையாக காட்சியளிப்பதாக ஐதீகம்.

அதுபோலவே, வெளிப்பிராகாரத்தில் வள்ளி, தெய்வானையுடன் மயில் வாகனத்தில் ஆசனம் இட்டு அமர்ந்திருக்கும் முருகப்பெருமான், சுமார் 8 அடி உயரத்துடன் மிக பிரமாண்டமாக காட்சி தருவது இக்கோயிலின் சிறப்பம்சம். இது தவிர சண்டிகேஸ்வரர், கன்னிமூல விநாயகர், நர்த்தன விநாயகர் ஆகிய தெய்வ மூர்த்திகளும் சிற்ப அழகுடன் காட்சி தருகிறார்கள்.

தேன் அபிஷேக மகிமை

ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் ராகு காலங்கள் மற்றும் திங்கட்கிழமை, பௌர்ணமி, அமாவாசை, பிரதோஷம் மற்றும் அவரவர் ஜன்ம நட்சத்திர தினங்களில் இந்தக் கோயிலுக்கு வந்து தேனபிஷேகம் செய்து வழிபட உகந்த நாட்களாகும்.

நீண்ட காலமாக திருமணமாகாதவர் கள், இந்தக் கோயிலுக்கு வந்து ஈசனுக்கு தேனபி ஷேகம் செய்து வழிபடுவதுடன், தொடர்ந்து 16 பிரதோஷ தினங்களில் வந்திருந்து ஈசனைத் தரிசித்து வேண்டிக் கொண்டால் திருமணத் தடை நீங்கும். மேலும் ராகு, கேது, செவ்வாய் மற்றும் களத்திர தோஷம் முதலான தோஷங்கள் கொண்டவர்களும், பிள்ளை பாக்கியம் இல் லாதவர்களும், தீராத மனக்கவலை கொண்ட வர்களும் சொர்ணபுரீஸ்வரருக்கு தேன் அபிஷேகம் செய்து, பிரதோஷ காலங்களில் தொடர்ந்து வழிபட்டால் பிரச்னைகள் யாவும் அடியோடு நீங்கும் என்பது நம்பிக்கை.

தோஷம் உள்ளவர்கள், ஸ்வாமிக்கு தேன் அபிஷேகம் செய்து பிரசாதமாகத் தரப்பட்ட தேனை 16 தினங்களுக்கு காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் சுப பலன்கள் கிடைக்கும்.

இந்தத் தலத்தில் சிவபெருமான் முனிவருக்கு காட்சியளித்தது பிரதோஷ வேளை என்பதால், இந்த ஆலயத்தில் பிரதோஷ வழிபாடு விமரிசை

யாக நடைபெறுகிறது. பிரதோஷ நாட்கள் மட்டுமின்றி பௌர்ணமி மற்றும் தேய்பிறை அஷ்டமி மற்றும் திங்கட் கிழமைகளில் வரும் சோமவார பூஜை, தமிழ் வருடப்பிறப்பு, சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், திருவாதிரை, கார்த்திகை தீபம் போன்றவையும் இங்கு வெகு விசேஷமாக நடைபெறுகின்றன.

காகபுஜண்டர் வழிபாடு

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு காகபுஜண்ட சித்தர் சிவ தரிசனம் வேண்டி 16 ஆண்டுகள் கடுமையாக தவம் மேற்கொண்டிருந்தார்.அவரது தவத்தை மெச்சிய சிவபெருமான் பிரதோஷ நேரத்தில் 16 முகங்களைக் கொண்ட ஷோடசலிங்கமாக அவருக்கு இங்கே காட்சி தந்தாராம். அதனாலேயே காக புஜண்டர் இங்கே சிவலிங்கத்தை இங்கே பிரதிஷ்டை செய்து வழிபட்டதாகவும், தற்போது ஸ்ரீசொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ள பகுதியிலேயே ஈசானத்தில் அவர் ஜீவசமாதி அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இக்கோயில் ஈசானத்தில் அமைந்துள்ள சித்தரின் ஜீவ சமாதியை 16 முறை வலம் வந்து, 2 முதல் 16 தேங்காய் வரை உடைத்து வழிபட்டால் பூர்வ ஜன்ம பாவ தோஷங்கள், தீராத மனக் கவலைகள் நீங்கி சிவ புண்ணியம் பெறலாம் என்பது நம்பிக்கை.

அவர் அருளிய நாடிச் சுவடியில் இக்கோயிலின் கருவறை மிக உக்கிரமானதாக இருக்கும் என்றும், அதனால் கருவறையில் ஏற்றப்படும் தீபம், எப்போதும் துடித்துக்கொண்டே இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இன்றும் இறைவனின் கருவறையில் அமைந்துள்ள தீபம் துடிப்போடுதான் எரிந்து கொண்டிருக்கிறது.

திருச்சிற்றம்பலம்.
சிவாய நம.

புன்னகை பூத்த தட்சிணாமூர்த்தி

தஞ்சை மாவட்டம் பாபநாசம் வட்டம் திருமண்டங்குடி கிராமத்தில் அமைந்திருக்கிறது அருள்மிகு திரிபுரசுந்தரி உடனாய திருபுவனேஸ்வரர் திருக்கோயில் இது தெய்வீகத்துடன் தமிழர்தம் தீரத்தையும் உலகிற்கு எடுத்துக் காட்டிடும் வகையில் வித்தியாசமானதாக அமைந்திருக்கிறது. தந்தைக்கு உபதேசித்த தகப்பன் சுவாமி அமைந்திருக்கும் சுவாமிமலையில் இருந்து மேற்கில் ஏழு கிலோ மீட்டரில் இத்தலம் அமைந்திருக்கிறது. இத்தலத்தின் அருகாமையில் புள்ளபூதங்குடி, திருவைகாவூர் ஆகிய திருத்தலங்களும் அமைந்திருக்கின்றன.

12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கோயில் மூன்றாம் ராஜராஜசோழனின் காலத்தைச் சேர்ந்த ஆலயம் இது. இங்குள்ள கல்வெட்டுக்களில் இந்த ஆலயத்திலுள்ள சிவனுக்கு திருபுவன வீரேஸ்வரமுடையார் என்று பெயர் இருந்தது குறிப்பிடப்பட்டுள்ளது. இது பன்னிரு ஆழ்வார்களில் மிக முக்கியமானவரான தொண்டரடிப்பொடி ஆழ்வார் அவதரித்த திருத்தலமுமாகும்.
இங்கு ஞானப்பள்ளி தட்சிணாமூர்த்தியும், சண்டிகேஸ்வரரும் வீற்றிருக்கின்றனர். தெற்கு கோஷ்டத்தில் அமைந்திருக்கும் தென்முகக் கடவுளான தட்சிணாமூர்த்தி புன்னகை பூத்த முகத்துடன், இடதுபாதம் மலர்த்தி மேல் நோக்கிய நிலையில் வீற்றிருக்கிறார். இது வேறெங்கும் காணப்படாத சிறப்பாகும். இவரை வழிபடுவோர் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவார்கள்.

ஜப மாலையுடன் பிரம்ம சண்டேஸ்வரர்
சரியாகப் பேச முடியாதவர்கள் இவரை வழிபட்டால் சரளமான பேச்சுக்கு சொந்தக்காரர்கள் ஆவார்கள் என்று இத்தலம் குறித்து நம்பிக்கை நிலவுகிறது. இக்கோயிலில் அமைந்துள்ள சண்டிகேசுவரர் நான்கு திருக்கரங்களூடன் கையில் செப மாலை கொண்டு பிரம்ம சண்டேஸ்வரராக அமைந்துள்ளார்.
இக்கோயிலிலில் அமைக்கப்பட்டுள்ள கோமுகம் வேறெந்த ஆலயத்திலும் இல்லாத காட்சிகளை தன்னகத்தே கொண்டிருக்கிறது. வனப்பகுதியில் நடக்கும் வீரமிக்க நிகழ்ச்சிகளை விவரிக்கும்வண்ணம் சிற்பங்கள் அமைந்துள்ளன. யாழி ஒன்று யானையை துரத்திச் செல்கிறது. அந்த யானையோ ஒரு குதிரையை துரத்திக் கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறது. அக்குதிரைமீது வீரன் ஒருவன் அமர்ந்து வேட்டையாடிக் கொண்டிருக்கிறான். இக்காட்சிகளை வேட்டையாட வந்த ஒருவர் மரத்தின் மேல் அமர்ந்து உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கிறார். இவற்றிற்கிடையே தீரமிக்க ஒரு பெண், காட்டுப் பன்றி ஒன்றை நீண்ட வாளால் கழுத்துப் பகுதியில் குத்தி வீழ்த்தும் காட்சி மிக அற்புதமாகச் செதுக்கப்பட்டுள்ளது. நளின உடல்கொண்ட பெண்களின் நாட்டிய அடவுகளை வெளிப்படுத்தும் சிற்பங்களும் இக்கோமுகத்தில் உள்ளன.
சுவாமிமலை, திருமணஞ்சேரி, கஞ்சனூர், சூரியனார்கோயில், திருநாகேஸ்வரம் என்று கும்பகோணம் சுற்றுவட்ட திருக்கோயில்களுக்கு செல்வோர் திருமண்டங்குடி கோயிலுக்கும் சென்று வரலாம்.

நலம் தரும் கணபதி

நலம் தரும் கணபதி

தாமிரபரணி ஆற்றங்கரையில் எழுந்தருளியிருக்கிறது மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட கணபதி ஆலயம். இத்திருக்கோயில், சுமார் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இப்புராதனத் திருக்கோயிலில், விநாயகர் தன்னுடைய முப்பத்திரண்டு திருத்தோற்றங்களில் எட்டாவது வடிவமாக போற்றப்படுகின்ற உச்சிஷ்ட கணபதியாக அவதரித்து அருள்பாலித்துவருகிறார்.

ஜீவநதியான ஆசியாவிலேயே ராஜகோபுரத்துடன் எட்டு நிலை மண்டபங்கள், மூன்று பிராகாரங்கள், கொடிமரத்துடன் கூடிய சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் மூலவராக விநாயகர் எழுந்தருளியுள்ள தனித்திருக்கோயில் இது.

ஹேரண்ட மகரிஷி

கலியுகத்தில் விநாயகரைப் பற்றிப் போதிக்க முக்தல மகரிஷியைத் தென்நாட்டுக்கு அனுப்பிய சீடர்களில் ஒருவராகிய ஹேரண்ட மகரிஷியால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பெருமையும் இத்திருத்தல மூலவர் உச்சிஷ்ட கணபதிக்கு உண்டு. இங்கு அவர், கருவறையில் அம்பாளை மடியில் தாங்கிக் காட்சி தருகிறார். மும்மூர்த்திகளை விட முதன்மை யான கடவுளாக விநாயகப் பெருமான் விளங்குவதால், அவரது மடியில் வீற்றிருக்கும் ‘நீலவாணி' அம்பாளும் முப்பெரும் தேவியரின் அம்சமாகக் கருதப்படுகிறார்.

கொழுக்கட்டை, சர்க்கரைப் பொங்கல்

திருமணத் தடை நீங்குவதற்கும், தம்பதியரிடையே மன ஒற்றுமை ஏற்படுவதற்கும் பக்தர்கள் இவரை நம்பிக்கையுடன் வழிபடுகின்றனர். செல்வம் பெருகுவதற்குக் கொழுக்கட்டையையும், குழந்தை வரத்திற்குச் சர்க்கரைப் பொங்கலையும், நோய்கள் தீர்வதற்குக் கரும்புச் சாற்றையும் இங்கு நைவேத்தியம் செய்கிறார்கள்.

முற்காலத்தில் பாண்டிய மன்னர்கள் முதல் நாயக்க மன்னர்கள் வரையிலும், அதன் பின்பு நகரத்தார்களும் வணங்கி அருள் பெற்ற இத்திருத்தலத்திற்கு அருகில் பைரவ தீர்த்தக் குளம் உள்ளது. இதில் புனித நீராடி உச்சிஷ்ட கணபதியை வழிபட்டால் சகல தோஷங்களும் நிவர்த்தியாகும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. வருடந்தோறும் சித்திரை மாதத்தின் முதல் தினத்தன்று சூரிய ஒளி உச்சிஷ்ட கணபதியின் மீது பரவும் அதிசய நிகழ்வும் இங்கு நடைபெறுகிறது. அந்நாளில் சூரிய பகவான் விநாயகரை வணங்குவதாகச் சொல்லப்படுகிறது.

மூர்த்தி, தலம், தீர்த்தம், வரலாறு ஆகியவற்றால் சிறந்து விளங்கும் மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட கண்பதி திருத்தலத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாகத் திருப்பணிகள் நடைபெற்றுவருகின்றன.

விநாயகர் சதுர்த்தித் திருநாளை முன்னிட்டு, அன்றைய தினம் உச்சிஷ்ட கணபதிக்கு விசேஷ அபிஷேகங்களும், சிறப்பு தீபராதனைகளும் நடைபெறுகின்றன. அதிகாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை திருக்கோயில் நடை திறந்திருக்கும்.

உச்சிஷ்ட கணபதியை வணங்க உள்ளம் மகிழும்.

திருவாரூரில் அருள்பாலிக்கும் ஸ்ரீ கமலாம்பாள் சமேத ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமி திருவடிகளே சரணம் ... !!!

திருவாரூரில் அருள்பாலிக்கும் ஸ்ரீ கமலாம்பாள் சமேத ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமி திருவடிகளே சரணம் ... !!!

பஞ்சபூத ஸ்தலங்களில் பூமிக்கான திருத்தலம் திருவாரூர்.
திருவாரூர் கோவில் சிதம்பரம் கோவிலைவிட பழமையானது என்பதை குறிக்கும் வகையில் இங்கு பாடப்படும் தேவாரத்தில் திருச்சிற்றம்பலம் என்ற வார்த்தை குறிப்பிடப்படுவது இல்லை.

தியாகராஜரின் தலவரலாறு இன்றும் அறியப்படவில்லை. இதற்கு சான்று ஞானசம்பந்தர் திருவாரூரில் கோவில் கொண்டது எந்நாளில் என 10 பாடல்களை பாடியுள்ளார்.
நவகிரகங்கள் அனைத்தும் ஒரே நேர்கோட்டில் நின்று தரிசனம் தரும் திருத்தலம்.
எமனே சண்டிகேஸ்வரரை ஆட்கொண்டு எமபயம் போக்கும் திருத்தலம் .

சுந்தரருக்காக (நால்வரில் ஒருவர் ) சிவனே வீதியில் நடந்துசென்று பெண் கேட்ட திருத்தலம்.
நட்பின் முக்கியத்தை உணர்த்த சுந்தரருக்கு தனி இடம் தந்த திருத்தலம்.
கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் தோன்றிய திருத்தலம்.
நமி நந்தி அடிகள் நீரினால் விளக்கு ஏற்றிய திருத்தலம் .
பசுவிற்கு நீதிவழங்க தன் மகனை தேரின் சக்கரத்தில் இட்டு கொன்ற நீதிவழுவா மனுநீதி சோழன் வாழ்ந்த திருத்தலம்.

திருவாரூர் கோவில் அளவும் , தெப்பக்குளமும் ஒரே அளவுகொண்டதாகும்.
இக்கோவில் 9 இராஜகோபுரம், 80 விமானம், 12 உயர மதில்கள் , 13 மண்டபங்கள், 15 தீர்த்த கிணறுகள், 3 தோட்டம், 3 பிரகாரம் என பிரமாண்டமான கட்டட அமைப்பாகும்.
24 உட்கோவில்களையும், 365 சிவலிங்ககளையும், 86 விநாயக சிலைகளையும் கொண்ட திருத்தலம் திருவாரூர் ஆகும்.